ஆன்டிகுவா: இந்தியா மற்றும் வங்கதேச அணியில் மோத உள்ள சூப்பர் 8 சுற்றுப்போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சரி சமமாக சாதகமாக இருக்கும்.
பேட்டிங் பலமானதாக இருந்தால் 200 ரன்கள் வரை கூட எடுக்க முடியும் என்பதால் இந்திய அணிக்கு இது ஜாக்பாட் வாய்ப்பு. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி ஆடிய போட்டிகள் அனைத்துமே மந்தமான பிட்ச்களில், பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் நடந்தன. அந்த வகையில் இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வாய்ப்பு.

நார்த் சவுண்ட் மைதானத்தில் பந்துவீச்சில் பலமாக இருக்கும் அணி எதிரணியை 150 ரன்களுக்குள் எளிதாக சுருட்டலாம். எனவே, இந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணி பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்கை வேகப் பந்துவீச்சாளர்களாக களம் இறக்கும் பட்சத்தில் அது வங்கதேச அணிக்கு கடும் சிக்கலாக இருக்கும். மறுபுறம் ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்கள் பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப வீசுவார்கள்.
அதே சமயம் வங்கதேச அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் சுழற் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடக் கூடும். அந்த அணியின் முஸ்தாபிசூர் ரஹ்மான் வேகப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர்களை எதிர்கொள்ளும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த போட்டியில் பிட்ச்சை தாண்டி வேறு ஒரு பிரச்சனையும் உள்ளது. அதாவது போட்டியின் இடையே மழை பெய்யக்கூடும். அப்படி மழை பெய்தால் பிட்ச்சின் தன்மை மாறக்கூடும். பெரும்பாலும் மழைக்குப்பின் வீசப்படும் சில ஓவர்கள் பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். அதை மனதில் வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக ரன் சேர்க்க வேண்டும்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா கடந்த நான்கு போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் வெறும் 5 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் 24 ரன்கள் சேர்த்த போதும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100 ஆக மட்டுமே இருந்தது. சிவம் துபெவின் பேட்டில் பந்துகள் படுவதே சிரமமான ஒன்றாக உள்ளது. இவர்கள் மூவரும் இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும். பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இவர்கள் மூவரும் ஃபார்முக்கு திரும்புவார்களா? என்பதை பார்க்க வேண்டும்.