மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த தலைமைப் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட், தனது பதவிக்காலம் முடிந்ததையடுத்து கண்ணீர் மல்க விடைபெற்றார். 2026 டி20 உலகக்கோப்பையில் கனடாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.
கனடாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதன் காரணமாக அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. இந்தப் போட்டியே ஜொனாதன் ட்ராட் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய கடைசிப் போட்டியாகும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அந்த அணியை வழிநடத்தி வந்த அவர், இந்தப் போட்டியுடன் விடைபெற்றார்.

செய்தியாளர் சந்திப்பில் தனது அனுபவம் குறித்துப் பேசத் தொடங்கிய ட்ராட், ஒரு கட்டத்தில் பேச முடியாமல் விம்மினார். கண்கள் கலங்க, தொண்டை அடைக்க நின்ற அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு பேசினார்.
"நான் உணர்ச்சிவசப்பட விரும்பவில்லை என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த வீரர்களுடன் நான் பயணித்த நினைவுகள் என்னை நெகிழ வைக்கின்றன. நான் முதன்முதலில் அயர்லாந்துக்குச் சென்றபோது, இந்த வீரர்கள் எவ்வளவு திறமையானவர்கள் மற்றும் கவனமானவர்கள் என்பதை நேரில் கண்டேன். அந்த இயற்கையான திறமையுடன் சிறிது தொழில்முறை அணுகுமுறையையும், ஒரு கட்டமைப்பையும் சேர்த்தால் அவர்கள் எத்தகைய உயரத்தை எட்டுவார்கள் என்பதை நான் உணர்ந்தேன்" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான இப்ராகிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரைத் தான் முதன்முதலில் பார்த்த தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். "குர்பாஸ், சத்ரான் போன்றவர்களைப் பார்த்தபோது, இவ்வளவு அற்புதமான வீரர்களா என்று வியந்தேன். எங்களிடம் ரஷீத் கான், முகமது நபி, முஜீப் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே இருந்தனர். அவர்களுடன் இணைந்து இந்த இளம் திறமைகளை மெருகேற்றுவதே எனது நோக்கமாக இருந்தது" என்றார்.
மற்ற நாடுகளின் வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மிகக் குறைவு என்பதை ட்ராட் சுட்டிக்காட்டினார். "மற்ற நாட்டு வீரர்களுக்குச் சிறுவயதிலேயே கிரிக்கெட் அகாடமிகள், சிறந்த பள்ளிகள் மற்றும் நவீன பயிற்சிகள் கிடைக்கின்றன. எனக்குக் கிடைத்த அந்த ஆரம்பக்கால வாய்ப்புகள் இந்த வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கும் அவர்களுக்குமான பின்னணி மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும்."
"அத்தகைய வசதிகள் இல்லாத நிலையிலும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் மைதானத்தில் நின்று அவர்கள் விளையாடும் விதம் ஆச்சரியமானது. அவர்கள் கையாளும் நெருக்கடியும், விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வமும் எனக்குப் பெரும் வியப்பைத் தருகின்றன. இவர்களுடன் பணியாற்றியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இனி தூரத்தில் இருந்து பார்த்தாலும், இந்த வீரர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே எப்போதும் விரும்புவேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஜொனாதன் ட்ராட் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி அசுர வளர்ச்சி கண்டது. குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பையில் அந்த அணி அரையிறுதி வரை முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அவர் விடைபெறுவது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததைக் குறிக்கிறது. இனி ஆப்கானிஸ்தான் அணியின் பாதை எப்படி இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.