துபாய்: சர்வதேச கிரிக்கெட் உலகில் மீண்டும் 'சூதாட்டப்' புகார் பூதாகரமாக வெடித்துள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாகக் கிளம்பியுள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனடா கிரிக்கெட் வாரியத்தின் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கனடாவின் பிரபல புலனாய்வு நிகழ்ச்சியான 'தி பிஃப்த் எஸ்டேட்' தயாரித்த 'ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்' என்ற ஆவணப்படம் இந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதில், உலகக்கோப்பை தொடரின் போது கனடா அணி விளையாடிய சில போட்டிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னையில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கனடா அணியின் கேப்டன் தில்பிரீத் பாஜ்வா வீசிய ஒரு ஓவர் ஐசிசியின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அந்தப் போட்டியில் கனடா நிர்ணயித்த 173 ரன்கள் என்ற இலக்கை நியூஸிலாந்து துரத்தியது. தொடக்கத்தில் கனடா வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ரன்களைக் கட்டுப்படுத்தினர். ஆனால், 5-வது ஓவரை கேப்டன் தில்பிரீத் பாஜ்வா வீசினார். அந்த ஒரே ஓவரில் ஒரு நோ-பால் மற்றும் லெக்-சைடில் வீசப்பட்ட இரண்டு வைடு பந்துகள் உட்பட 15 ரன்களை அவர் வாரி வழங்கினார். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேட்ச் பிக்ஸிங் மட்டுமின்றி, கனடா கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் வீரர்கள் தேர்விலும் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்குமாறு பயிற்சியாளர்களுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து முன்னாள் பயிற்சியாளர் குர்ரம் சோகன் கூறுகையில், வாரிய உறுப்பினர்கள் தன்னைத் தொலைபேசியில் அழைத்து சில வீரர்களைத் தேர்வு செய்ய வற்புறுத்தியதாகவும், போட்டிகளின் முடிவை மாற்ற முயற்சி செய்ததாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் பயிற்சியாளர் புபுது தசநாயக்க, சில வீரர்களைத் தேர்வு செய்ய மறுத்ததால் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக வாரியம் மிரட்டியதாகக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், "ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து நாங்கள் அறிவோம். தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், அதன் தன்மை குறித்து விரிவான தகவல்களை வெளியிட முடியாது. கிரிக்கெட் விளையாட்டின் நேர்மையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.