துபாய் : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய நியூஸிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தார்கள். இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றி இருக்கிறது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து பந்துவீச்சில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை அமீலியா கெர் தொடர் நாயகி விருதை கைப்பற்றினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமீலியா கெர், மகிழ்ச்சியால் எனக்கு வார்த்தையே வரவில்லை. நம்ப முடியாமல் இருக்கின்றேன். இந்த ஆண்டு நாங்கள் பல கடினமான சூழலை சந்தித்தோம். தற்போது எங்களுடைய கனவை நாங்கள் எட்டி பிடித்திருக்கிறோம். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது. இதன் மூலம் இரண்டாவதாக பந்து வீசுவது சுலபமாக இருந்தது. இதனால் 14 ரன்கள் மேல் அடித்தாலே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தேன்.
எங்கள் அணியில் நான் மட்டுமல்லாமல் பலரும் வெற்றிக்காக பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். நான் பேட்டிங் செய்யும்போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. எனினும் அதை நான் மறைத்துக் கொண்டு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபட்டேன். நான் வீசிய முதல் பந்தில் என்னால் முடியாமல் வலியால் துடித்தேன்.
ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு கோப்பையை வெல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக போராடினேன்.
இது போன்ற பெரிய போட்டிகளில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.நியூசிலாந்து மகளிர் அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றியை என்னால் மறக்க முடியாது என்று அமீலியா தெரிவித்துள்ளார்.