லாகூர் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறி இருப்பது அந்த நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவுக்கு சென்றது. மேலும் வீரர்கள் ஏதேனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார்களா என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இதைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அந்த அணி ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து வருவதும் அதற்கு அவர்கள் அடிக்கப் போவதும் நடக்கின்றது. இந்த சூழலில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் செய்த சேட்டை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் போட்டிகள் நடத்தப்பட்டது.

அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது பல்வேறு மக்களின் கனவாக இருக்கும். இந்த சூழலில் பாகிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் தான் நடந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்க அந்த அணி வீரர்கள், மனைவி, மகன்கள் மட்டுமல்லாமல் மச்சான், மாமா, தாய், தந்தை என அனைவரையும் அழைத்து சென்று அமெரிக்காவில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் 15 வீரர்கள் கூடுதலாக நான்கு ரிசர்வ் வீரர்கள் அணி பயிற்சியாளர், மருத்துவர் என மொத்தமே 34 பேர்கள் தான் இருக்கிறார்கள். இதில் ஒரு அறைக்கு இரண்டு பேர் என்றாலே மொத்தமாகவே 17 ரூம் தான் தேவைப்படும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக ஒவ்வொரு ஹோட்டலிலும் 60 ரூம்கள் புக் செய்யப்பட்டு இருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு செல்கிறோம் என்பதால் கிரிக்கெட் வாரியத்தின் பணத்திலே தங்களுடைய உறவினர்களையும் முக்கிய வீரர்கள் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். குறிப்பாக மனைவி மற்றும் மனைவி வீட்டு சொந்தங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சுற்றி பார்த்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமே கிரிக்கெட் வீரர்களுடன் இருந்து நேரத்தை செலவிட்டதால் வீரர்களால் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தபோது, ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய மனைவியை அழைத்து வர தடை விதிக்கப்பட்டது. அப்படி குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றால் சிறிது காலம் மட்டும் தான் தங்க அனுமதிக்கப்படும். அப்படி இல்லையென்றால் வீரர்களே தங்களுடைய செலவில் வேறு ஹோட்டலில் ரூம் புக் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் கவனம் சிதறாமல் இருக்கும் என ரவி சாஸ்திரி நம்பினார்.
ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த சொந்தத்தையும் கிரிக்கெட் வாரியம் செலவில் அழைத்துச் சென்று சுற்றுலா செல்வது போல் நேரத்தை செலவிட்டு இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் எந்தெந்த வீரர்கள் உறவினர்களுக்காக ரூமை எடுத்தார்கள் என்று கணக்கிட்டு அவர்களின் ஊதியத்தில் கை வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட உள்ளது.