துபாய் : மகளிருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி களம் இறங்கியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பெரிய ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவியதால் புள்ளி பட்டியலில் மைனஸ் ரன் ரேட் உடன் கடைசி இடத்தில் இருந்தது.

இதனால் எஞ்சிய ஆட்டங்களில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இந்த சூழலில் 106 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 10 அல்லது 15 ஓவர்களில் எல்லாம் துரத்தி இருந்தால் இந்நேரம் ரன் ரேட்டில் எகிறி இருந்திருக்கும்.
ஆனால் இந்திய மகளிர் அணி வெறும் ஏழு பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வெற்றியை பெற்றது. இதன் மூலம் முதல் புள்ளிகளை இந்திய பெற்றாலும் ரன் ரேட்டில் பெரிய அளவில் முன்னேறவில்லை. தற்போது குரூப் ஏ வில் நியூசிலாந்து அணி இரண்டு புள்ளிகள் ரன் ரேட் 2.90 உடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2 புள்ளிகள் மற்றும் ரன் ரேட் 1.90 உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தான அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இரண்டு புள்ளிகள் மற்றும் ரன் ரேட் 0.55 உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி 2 புள்ளிகள் உடன் மைனஸ் 1.21 என்ற ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 0 புள்ளிகளுடன் மைனஸ் 1.66 என்ற ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
குரூப் டி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முதல் மூன்று இடத்திலும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.