மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்பட்ட சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீக்கத்திற்குப் பின்னால் விளையாட்டு ரீதியான காரணங்களை விட, அரசியல் ரீதியான காரணங்களே அதிகம் இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நாங்கள் இதைச் சொல்லவில்லை.. ஆனால் சமூக வலைதளங்களிலும், சில ஊடக செய்திகளிலும் இப்படி ஒரு கிசுகிசு பலமாக அடிபடுகிறது. அதன் விவரம் இதோ:
2025 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஃபினிஷர் ரோலுக்கு ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இயல்பான தேர்வு போலத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் பெரிய அரசியல் அழுத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, அணித் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் ரிங்கு சிங் பெயர் பரிசீலனைக்கே வரவில்லை என்றும், ஆனால் திடீரென ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக அவர் ஒரு "கட்டாயத் தேர்வாக" திணிக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
ரிங்கு சிங்கை உள்ளே கொண்டு வருவதற்காகவே, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்கள் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரத்தில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவருமே உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது ஒருபுறம் இருக்க, ரிங்கு சிங்கின் வருங்கால மனைவியான பிரியா சரோஜ், சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சியின் சின்னம் "சைக்கிள்". இதைச் சுட்டிக்காட்டும் விதமாக, சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் சூசகமாகப் பதிவிட்டு வருகின்றனர். ஆசியக் கோப்பைத் தொடரின் போதும் இதேபோன்று அரசியல் அழுத்தத்தின் பெயரிலேயே ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார் என்றும், தற்போது உலகக்கோப்பையிலும் அதுவே எதிரொலித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
ரிங்கு சிங்கை அணியில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என்ற நிலை வந்ததால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜித்தேஷ் சர்மாவை அணியிலிருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும், ஜித்தேஷ் இல்லாததால் அணியில் ஒரு மாற்று விக்கெட் கீப்பர் நிச்சயம் தேவை என்பதால், அந்த இடத்திற்கு இஷான் கிஷனை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஓப்பனிங் மற்றும் கீப்பிங் செய்யும் இஷான் கிஷன் உள்ளே வந்ததால், ஏற்கனவே அணியில் இருந்த ஓப்பனிங் இடத்தில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை வந்தது. இதன் விளைவாகவே சுப்மன் கில் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார் என்று ஒரு "கட்டுக்கதை" இணையத்தில் வலம் வருகிறது. அதாவது ரிங்குவுக்காக ஜித்தேஷ் காலி செய்யப்பட, ஜித்தேஷின் இடத்திற்கு இஷான் வர, இஷானுக்காக கில் பலிகடா ஆக்கப்பட்டார் என்பதே அந்தத் தகவல்.
அரசியல் காரணங்கள் ஒருபுறம் கிசுகிசுக்கப்பட்டாலும், புள்ளிவிவரங்கள் ரிங்கு சிங்கிற்கு ஆதரவாகவே உள்ளன என்பதையும் நாம் மறுக்க முடியாது. ரிங்கு சிங் 35 டி20 போட்டிகளில் 42.30 சராசரி மற்றும் 161.76 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிரட்டி வருகிறார். மறுபுறம் சுப்மன் கில் டி20 போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 36 போட்டிகளில் 28.03 சராசரி மற்றும் 138.59 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார்.
சுப்மன் கில்லின் மோசமான டி20 ஃபார்ம் தான் அவரது நீக்கத்திற்குக் காரணம் என்று பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டாலும், "ரிங்கு சிங் தேர்வில் அரசியல் தலையீடு இருந்தது" என்ற பேச்சும் அடிபடுகிறது. எது உண்மை என்பது அந்தத் தேர்வுக்குழு அறைக்குள்ளே இருந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!