மும்பை: சமீபத்தில் முடிந்த 2026 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த மெகா தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் சிறப்பான தலைமைப் பண்பு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மனம் திறந்து பாராட்டியுள்ளார். குறிப்பாக, தொடக்க வீரராக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை தொடர்ந்து களமிறக்கியது அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் 5 போட்டிகளில் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சாம்சன், உலகக்கோப்பையில் தொடக்க சுற்றில் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதன்பின்னர் விஸ்வரூபம் எடுத்த அவர், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்களும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் விளாசித் தள்ளினார். ஒட்டுமொத்தமாக 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஒரு டி20 உலகக்கோப்பை சீசனில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவேயாகும்.

ஒரு வீரர் மீது கேப்டனும் பயிற்சியாளரும் முழு நம்பிக்கை வைத்தால் எப்படிப்பட்ட அற்புதங்களும் நிகழும் என்பதற்கு சாம்சன் சிறந்த உதாரணம் என பாண்டிங் தெரிவித்தார். மேலும் இறுதிப்போட்டியில் 52 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா மற்றும் சாம்சன் ஆகியோரிடம் சூர்யகுமார் எப்படி உரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதே உண்மையான தலைமைப் பண்பு என்றார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இந்த தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக 84 ரன்கள் அடித்த அவர், அடுத்த 8 இன்னிங்ஸ்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு கேப்டனாக பேட்டிங்கில் சொதப்பும்போது அணியை சிறப்பாக வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் சூர்யகுமார் அந்த மாபெரும் அழுத்தத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டு அமைதியான முறையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என ரிக்கி பாண்டிங் புகழ்ந்து தள்ளினார்.
