பார்படாஸ்: உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். அதேநேரம் இதில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நல்ல ரிதத்தில் இருந்த போது பண்ட் செய்த செயல் தான் அவர்களை காலி செய்துவிட்டது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
பார்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா கலக்கல் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 176 ரன்களை எடுத்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக ஆடினாலும் கடைசி நேரத்தில் சொதப்பியது. இதனால் அவர்களால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது..
காரணங்கள்: இந்தப் போட்டியில் கோலி- அக்சர் பேட்டிங், பும்ரா- ஹர்திக் பவுலிங், சூர்யகுமார் யாதவின் அட்டகாசமான பீல்டிங் முக்கிய காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் இந்த போட்டியில் நடந்த மற்றொரு முக்கியமான மேட்டரும் வெற்றிக்கு காரணமாகும்.
அதாவது கிளாசெனும் மில்லரும் களத்தில் இருந்த போது போட்டி நமது கையில் இல்லை. இருவரும் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தனர். குறிப்பாக கிளாசென் இந்திய பவுலர்களை வைத்து செய்து கொண்டு இருந்தார். 15ஆவது ஓவரை அக்சர் பட்டெல் வீசிய நிலையில், அதில் 2 சிக்சர், 2 பவுன்டரிகளை கிளாசென் விளாசினார். அந்த ஓவரில் 2 வைட்களுடன் மொத்தம் 24 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்குக் கிடைத்தது. இதே ரேஞ்சில் ஆட்டம் சென்றிருந்தால் தென் ஆப்பிரிக்கா மிக எளிதாக வென்று இருக்கும்.
பண்ட்: அடுத்த ஓவரை பும்ரா வீசிய நிலையில், அதை டிபன்ஸாகவே தென்னாப்பிரிக்கா ஆடியது. அந்த ஓவரில் 4 ரன்களை அவர்கள் எடுத்தார்கள். பும்ரா ஓவரை டிபன்ஸாக ஆடியதால் அடுத்த ஓவரில் நிச்சயம் டார்கெட் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் அவர்கள் இருந்த ரிதமிற்கு தொட்டாலே பவுன்டரி, சிக்சர்கள் பந்து கொண்டு இருந்தது.

இந்த நேரத்தில் கீப்பர் பண்ட் செய்த செயல் கவனிக்கும்படி இருந்தது. அதாவது அவர் பும்ரா ஓவருக்கு பிறகு காலில் கட்டி இருந்த பேடை மாற்றினார். அதற்கு சில நிமிடங்கள் ஆனது. அதன் பிறகே அடுத்த ஓவரை வீசினார்கள். இந்த சில நிமிடங்கள் ஆட்டத்தை ஸ்லோ டவுன் செய்ய உதவியது. நல்ல ரிதத்தில் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் ரிதத்தை உடைத்தது.
ஆட்டத்தை மாற்றியது: இதன் பிறகு 17ஆவது ஓவரை பாண்டியா வீசிய நிலையில், முதல் பந்திலேயே கிளாசென் அவுட் ஆனார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே போனது. அடுத்து 18ஆவது ஓவரை பும்ரா வீசிய நிலையில், 2 ரன்களை விட்டுக் கொடுத்து மார்கோ ஜான்சன் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். இந்த 2 ஓவர்கள் தான் மேட்ச் முடிவை மாற்றியது என்று சொல்லலாம்.
இதில் பண்ட் எங்கு வந்தார் எனக் கேட்கிறீர்களா... ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாகச் சென்று கொண்டு இருந்த போது பண்ட் திடீரென கால் பேட்டை மாற்றுகிறேன் என சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டது ஆட்டத்தை ஸ்லோ டவுன் செய்துள்ளது. இது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் ரிதத்தை காலி செய்துள்ளது.
ஏன் முக்கியம்: ஏன்ப்பா பேட் மாற்றியது எல்லாம் ஒரு விஷயமா என கேட்காதீர்கள்.. உண்மையில் பேட்ஸ்மேன்கள் நல்ல ரிதத்தில் இருக்கும் போது இதுபோன்ற பிரேக்குகள் ஆட்டத்தைத் திருப்பி போடும். அதைச் சரியாக பண்ட் செய்துள்ளார். அப்போது கமெண்டரியில் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இதைக் குறிப்பிடத் தவறவில்லை.
அதேபோல அஸ்வினும் தனது யூடியூப்சேனலில் பண்ட் செய்த இந்த செயல் பேட்ஸ்மேன் ரிதத்தை பாதித்ததாகவே கூறியிருந்தார். அதாவது பண்ட் சரியான நேரத்தில் ஆட்டத்தை ஸ்லோ டவுன் செய்ததும் ஆட்டம் இந்தியா பக்கம் வர முக்கிய காரணமாக இருக்கிறது.