சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தற்போது அரையிறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இன்னும் ஒரு படி மட்டுமே முன்னேற வேண்டிய நிலையில் உள்ளது. .
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாறு படைத்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் எடுத்து அணியின் இமாலய ஸ்கோருக்கு உதவினர்.

இந்த 257 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி கடுமையாகப் போராடிய போதிலும், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது அதன் கைகளிலேயே உள்ளது. குரூப் 1 பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தென்னாப்பிரிக்கா - 4 புள்ளிகள் (2 போட்டிகள், நிகர ரன் ரேட் +2.890)
வெஸ்ட் இண்டீஸ் - 2 புள்ளிகள் (2 போட்டிகள், நிகர ரன் ரேட் +1.791)
இந்தியா - 2 புள்ளிகள் (2 போட்டிகள், நிகர ரன் ரேட் -0.100)
ஜிம்பாப்வே - 0 புள்ளி (2 போட்டிகள், நிகர ரன் ரேட் -4.475)
மார்ச் 1: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே (பிற்பகல் 3 மணி)
மார்ச் 1: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (இரவு 7 மணி)
இந்தியா அரையிறுதிக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள்:
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தங்களது கடைசி சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எந்த ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா தொடரை விட்டு வெளியேறும்.
அதேபோல, மழையால் இந்தப் போட்டி ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் நிலை ஏற்பட்டால், இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும். இரு அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்போது, சிறந்த நிகர ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணியே அரையிறுதிக்குச் செல்லும். இந்திய அணியின் நிகர ரன் ரேட் தற்போது மைனஸில் இருப்பதால் இந்தியாவால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

எனவே, இந்திய அணி எவ்வித சிக்கலுமின்றி அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும். இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டி என்பதால், இந்தப் போட்டி ஒரு காலிறுதிப் போட்டியைப் போலவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.