மும்பை: மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை திட்டமிடப்பட்டிருந்த இந்திய அணியின் பயிற்சி, சந்திர கிரகணம் காரணமாகச் சற்று தாமதமாகத் தொடங்கியது.
எனினும், பயிற்சி தொடங்கியவுடன் அனைத்து வீரர்களும் தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தினர். இதில் குறிப்பாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.
சந்திர கிரகணம் காரணமாக இந்திய அணியின் பயிற்சி சுமார் இரவு ஏழரை மணிக்குத் தொடங்கியது. வலைப்பயிற்சியில் முதல் நபராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். துல்லியமாகக் கூறுவதானால் 135 நிமிடங்கள் அவர் பேட்டிங் செய்துள்ளார். பயிற்சியின் முடிவில் இரவு பத்து மணி அளவில் கடைசியாக அவர்தான் வெளியேறினார். தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் அவரது பயிற்சி நடைபெற்றது.

வலைப்பயிற்சியின் போது முதலில் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, பந்துகளைச் சரியாகக் கணித்துத் தட்டிவிடுவதிலும், சரியான திசையில் அடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அதன்பிறகு, மற்றொரு வலைக்கு மாறிய அவர், உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் வீசிய பந்துகளில் அதிரடியாக விளையாடிப் பயிற்சி பெற்றார். அப்போது பந்தை முழு பலத்துடன் அடிக்கும்போது அவரது கைகளில் பேட் திரும்புவதிலும், உடலை வளைத்து அடிப்பதிலும் சில தடுமாற்றங்கள் இருந்தன.
உடனடியாக இது குறித்துப் பயிற்சியாளர் ரியானிடம் ஆலோசனை நடத்திய அவர், மீண்டும் தனது பேட்டிங் குறைகளைச் சரிசெய்யத் தொடங்கினார். மீண்டும் வழக்கமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு தனது பேட்டிங் நுட்பங்களைச் செம்மைப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்பாகத் தனது குறைகளைச் சரிசெய்வதில் அவர் மிகவும் தீவிரமாக இருந்தார்.
ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்திற்குத் தயாராகி வருவதைப் பார்க்கும்போது, மும்பை வான்கடே ஆடுகளம் பேட்டிங்கிற்கு முழுமையாகச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புத் தொடரில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியியும், நேபாளம் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான போட்டியும் இதே ஆடுகளத்தில்தான் நடைபெற்றன.

குறிப்பாக, இரவு ஏழு மணிக்குத் தொடங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் குவித்து, இங்கிலாந்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. எனவே, இந்த ஆடுகளத்தில் இரவு நேரப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதேசமயம், முக்கியமான இந்தப் போட்டியில் பனியின் தாக்கமும் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரையிறுதியில் வெல்லும் அணியுடன் மோதும்.