மும்பை: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனாக இந்திய அணி களமிறங்கியுள்ள நிலையில், இதுவரை எந்த ஒரு அணியும் தொடர்ந்து கோப்பையை 2 முறை வென்றது இல்லை. மேலும் சொந்த மண்ணிலும், இதுவரை எந்த அணியும் டி20 உலககோப்பையை வென்றது இல்லை.
இந்த சூழலில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், "சொந்த மைதானத்தில் விளையாடும்போது எப்போதும் கூடுதல் அழுத்தம் இருக்கும். இந்த உண்மையை நான் மறுக்கவில்லை"

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பதற்றம் இருக்கும், அழுத்தம் இருக்கும், ஆனால் அதன் நேர்மறையான பக்கத்தைப் பார்த்தால், நிறைய உற்சாகம் இருக்கும். மைதானங்களுக்கு 30,000-35,000 பேர் வருவார்கள், பலர் வீடுகளில் இருந்தும் பார்ப்பார்கள். அவர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கை கொடுப்போம் என்பதே எனது வீரர்களுக்கு நான் சொன்ன விசயம்."
"இந்த போட்டியில் நான் எந்த பலவீனமான அணியையும் பார்க்கவில்லை. அனைத்து 20 அணிகளும் நல்ல கிரிக்கெட்டை விளையாட மிகவும் திறமையானவை. இந்த வடிவத்தில், ஒன்று அல்லது இரண்டு பேட்டர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அல்லது ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு நாளிலும் 24 பந்துகளில் சிறப்பாக செயல்படுவார்கள்."
"எனவே, நாமும் மற்ற பலமான அணிகளுக்கு எதிராக விளையாடியதைப் போலவே அனைத்து போட்டியிலும் விளையாட வேண்டும். ஹர்ஷித் ராணா இன்னும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை, பிசியோக்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர், ஆனால் நிலைமை நன்றாகத் தெரியவில்லை.அவர் போனால், நிச்சயம் பின்னடைவு தான்."
"ஆனால் எங்கள் அணியில் இன்னும் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் திறமையை நிரூபிக்க தயாராக உள்ளனர்" என்று சூர்யகுமார் தெரிவித்தார். கடந்த 2024 போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்து அமெரிக்கா மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.