மும்பை: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் அகமதாபாத்தில் உள்ள அனுமன் கோவிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டனர். இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் கீர்த்தி ஆசாத்துக்கு, கம்பீர் தற்போது கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் கோப்பையுடன் அகமதாபாத் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த கீர்த்தி ஆசாத், இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தார். தனது ட்விட்டர் பதிவில் : "கபில் தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை வென்றபோது, எங்கள் அணியில் இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர்கள் எனப் பல மதத்தினர் இருந்தனர். நாங்கள் கோப்பையை எங்கள் மத பிறந்த இடமான தாயகம் இந்தியாவுக்குக் கொண்டு வந்தோம்.

"இந்திய கிரிக்கெட் கோப்பையை ஏன் இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு இழுக்க வேண்டும்? ஏன் ஒரு மசூதிக்கு எடுத்து செல்லவில்லை? ஏன் ஒரு தேவாலயத்திற்கு செல்லவில்லை? ஏன் ஒரு குருத்வாராவுக்கு இல்லை?" என்று கீர்த்தி ஆசாத் கேள்வி எழுப்பினார்.
மேலும், "இந்த அணி இந்தியாவை பிரதிபலிக்கிறது. சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய் ஷாவின் குடும்பத்தை அல்ல! சிராஜ் மசூதியிலும், . சஞ்சு ஒருபோதும் தேவாலயத்திற்கு கொண்டு செல்லவில்லை. கோப்பை 1.4 பில்லியன் இந்தியர்கள் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் சொந்தமானது. ஒரு மதத்தின் வெற்றி விழா மட்டுமல்ல!" எனவும் கீர்த்தி ஆசாத் தனது பதிவில் வலியுறுத்தினார்.
ஆசாத்தின் ட்வீட் குறித்த கேள்விக்கு, கம்பீர் அளித்த பதில்: "நான் இதைப்பற்றி என்ன சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கக் கூட யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மிகப்பெரிய தருணம். உலகக் கோப்பை வெற்றியை நாம் கொண்டாடுவது முக்கியம். இது போன்ற கருத்துக்கள் சாதனையை நீர்த்துப்போகச் செய்யும்."
"அந்த 15 வீரர்களின் கடின உழைப்பையும், அவர்களின் முயற்சியையும் நீர்த்துப்போகச் செய்ய நீங்கள் விரும்பினால், நாளை யார் வேண்டுமானாலும் எந்த அறிக்கையையும் வெளியிடுவார்கள், அதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வது அந்த வீரர்களுக்கு நியாயமில்லை." என்றார்.

"சிறுவர்கள் எவ்வளவு அழுத்தத்திற்கு ஆளானார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தென் ஆப்பிரிக்காவிடம் ஒரு போட்டியில் தோல்வியுற்ற பிறகு அவர்கள் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தார்கள். இன்று நீங்கள் இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டால், உங்கள் சொந்த வீரர்களையும், உங்கள் சொந்த அணியையும் இழிவுபடுத்துகிறீர்கள், இது செய்யப்படக்கூடாது," என்று கம்பீர் அழுத்தமாகத் தெரிவித்தார்.