மும்பை: கவுதம் கம்பீருக்கு ஆமாம் சாமி என்று போடுபவர்கள் மட்டும்தான் இந்திய அணியில் இடம் பிடிப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த சூழலில் டி20 உலக கோப்பையில் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக தேர்வு குழு கூட்டத்திற்கு பயிற்சியாளர் கம்பீர் வரவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால், இந்திய அணியில் எப்போதுமே ஆமா சாமி போடும் நபருக்கு வாய்ப்பு தரப்படும் என்ற பழக்கமே கிடையாது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், அந்த குற்றச்சாட்டை நான் மறுக்கின்றேன். அப்படி ஒரு பழக்கமே இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே இருந்தது கிடையாது. ஏனென்றால் இது தேசிய அணி! எதோ கிளப் கிரிக்கெட் கிடையாது. உள்ளூர் கிரிக்கெட் அணியில் வேண்டுமானால், நீங்கள் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போக வேண்டும்.
ஆனால் இந்திய அணியில் ஆமாம் சாமி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது எல்லாம் வெளியில் பேசப்படும் விஷயம். ஆனால் உள்ளே அப்படி நடக்க வாய்ப்பே கிடையாது. இது இந்திய அணி! இது ஒரு சர்வதேச அணி! ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே கிடையாது. கம்பிருக்கு என ஒரு ஸ்டைல் இருக்கலாம்.
இந்தியா பெறும் வெற்றிக்கும், தோல்விக்கும் பயிற்சியாளர் மற்றும் பயிற்சி குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவருமே பொறுப்பாக இருக்க வேண்டும். டி 20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு எல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இதனால் கூட கம்பீர் டி 20 கிரிக்கெட்டில் அதிக அளவு சோதனை முயற்சிகளை செய்து தற்போது அணியை தேர்வு செய்திருக்கலாம். தற்போது உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் எந்த வீரருக்கு எந்த ரோல் என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கும். இந்த பரிசோதனை முயற்சியில் எந்த தவறும் இல்லை.
ஏனென்றால் கோப்பையை வெல்லவில்லை என்றால் பயிற்சியாளர் தான் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஒரு அணி சரியாக செயல்படவில்லை என்றால் பயிற்சியாளர் தான் அதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமே,தவிர வேறு யாரும் கிடையாது என்று மதன்லால் கூறியுள்ளார்.