ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிட்ககாக தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய அணி வியாழக்கிழமை நமீபியாவை எதிர்கொள்கிறது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீது தான் இருந்தது.
பாகிஸ்தான் நடத்திய புறக்கணிப்பு நாடகமும், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இது குறித்து பேசிய திலக் வர்மா, "நாங்கள் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தோம், பாகிஸ்தானுக்கு எதிரான மோதலுக்கு நாங்கள் ஏற்கனவே தயாராக இருந்தோம். போட்டி நடைபெறும் செய்தி கிடைத்தபோது, நாங்கள் உற்சாகமடைந்தோம்" கூறினார்.

"நான் மீண்டும் உலகக் கோப்பை அணியில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில வாரங்களாக நான் மேற்கொண்ட நல்ல பயிற்சிகள் இங்கே இருப்பதற்கு எனக்கு உதவியுள்ளன. உலகக் கோப்பையை வெல்வதே எனது நோக்கம். அணிக்கு பங்களிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். ஒரு கட்டாய ஓய்வுக்குப் பிறகு திரும்புவது போல் எனக்குத் தோன்றவில்லை" என்றும் திலக் வர்மா குறிப்பிட்டார்.
இந்திய அணி தனது இரண்டாவது குரூப் ஏ போட்டியில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை அன்று டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் நமீபியாவை 100 ரன்களுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
எனினும், எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என திலக் வர்மா எச்சரித்தார். “டி20 ஒரு சிறிய வடிவம் என்பதால் இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வலுவாகவே கருதப்படுகிறது.
மறுபுறம், வயிறு தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிஷேக் சர்மா தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். “அபிஷேக் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் நமீபியாவுடனான போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருக்கிறது” என்று திலக் வர்மா தெரிவித்தார்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் அமெரிக்காவுக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பை போட்டியைத் தவறவிட்டார். பும்ராவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் நாளை நடைபெறும் போட்டிக்குத் தயாராக இருப்பதாகவும் திலக் வர்மா தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா, உடல்நலக் குறைவால் இரண்டாவது பாதியில் களத்திற்கு வரவில்லை. பும்ரா விளையாடத் தகுதியுடன் இருந்தால், அவர் முகமது சிராஜுக்குப் பதிலாக அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அபிஷேக் சர்மா விளையாடவில்லை என்றால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்குவார்.
சஞ்சு சாம்சன் முதலில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் சிறப்பாகச் செயல்படாததால், இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை முதல் போட்டியில் விக்கெட் கீப்பராகக் களமிறக்கியது.