போர்ட் ஆஃப் ஸ்பெயின்: 2024 டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றி, டி20 உலக கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. இது வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் 200 ரன்கள் எடுப்பது கடினம் என்கிற நிலையில் அசத்திய சாதனையாகும். இதில் குறிப்பிடத்தக்க விதமாக, அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 25 பந்துகளில் 75 ரன்கள் விளாசி அசத்தினார். 300 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகையே மிரள வைத்தது. கேப்டன் ரோவ்மன் பாவல் 52 ரன்கள், ரூதர்போர்டு 47 ரன்கள் எடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.

அடுத்து சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. டேவிட் வார்னர் 15 ரன்கள், மிட்செல் மார்ஷ் 4 ரன்கள், அஷ்டன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அவர்கள் வெற்றி இலக்கை நெருங்கி வருவதில் சிரமப்பட்டனர். ஜோஸ் இங்கிலீஷ் 55 ரன்கள், ஜிம் டேவிட் 25 ரன்கள், மேத்யூ வேட் 25 ரன்கள் எடுத்தனர். ஆனால், அவர்களால் தொடர்ச்சியான கூட்டணி அமைக்க முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுழற் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அவரது துல்லியமான பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது.
இந்த வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை தொடருக்கு நம்பிக்கையுடன் தயாராகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டி டி20 உலக கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.