சென்னை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஏழு போட்டிகள் நடைபெற உள்ளது. குரூப் பிரிவில் நியூசிலாந்து அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடுகிறது.
ஆப்கானிஸ்தான், கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும் நெதர்லாந்து மற்றும் நமீபியா தலா ஒரு முறையும் பலப்பரீட்சை நடத்துகிறது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தகுதி பெற்றால், பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் ஒரு போட்டியில் விளையாடும்.

இந்த சூழலில் முதல் லீக ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. குறிப்பாக குலாப்தீன் நைப் 35 பந்துகளில் நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 63 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அங்குள்ள செய்தியாளர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் விசில் பயன்படுத்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்கள் யாரும் விசில் எடுத்து வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் மைதான ஊழியர்கள் பாதுகாவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். விசில் ஏதேனும் இருந்தால் அதனை பறிமுதல் செய்து விடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் மைதானத்தின் வெளியே இருக்கும் வியாபாரிகளும் விசில் விற்க வேண்டாம் என அறிவுறுத்திருப்பதாகவும் அந்த செய்தியாளர் பதிவிட்டுள்ளார்.
விசில் போன்ற பொருட்களுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதும் தடை இருந்ததில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடலே விசில் போடு என்பதை மையப்படுத்தி தான் இருந்தது. இந்த நிலையில் தற்போது விசிலுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.