லாகூர்: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேசம் பிடிவாதம் பிடித்ததால் ஐசிசி இந்த முடிவை எடுத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாகிஸ்தான் அணியும் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ரஷீத் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான அந்தஸ்தே ஆட்டம் கண்டுவிடும். இந்தியா - ஆஸ்திரேலியா போன்ற போட்டிகள் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் இல்லையென்றால் போட்டியின் தரம் குறைந்து, அது உலகக்கோப்பை போலவே இருக்காது. அது வெறும் ஐபிஎல் தொடர் போலத் தான் காட்சியளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் வருவாய் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியைப் பார்க்கவே 50 சதவீத ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் விலகினால் அந்த விறுவிறுப்பு செத்துவிடும். பாகிஸ்தான் விலகினால், தரவரிசை அடிப்படையில் உகாண்டா அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் உகாண்டா அணிகள் மோதுவதைப் பார்க்கவா ரசிகர்கள் கூடுவார்கள்? இதனால் உலகளவில் ஐசிசிக்குக் கிடைக்கும் வருவாய் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடுமையாகப் பாதிக்கப்படும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்துத் தங்கள் அரசே முடிவு செய்யும் என்று கூறியிருந்தார். இது குறித்துப் பேசிய ரஷீத் லத்தீப், "வாரியத் தலைவர் அப்படிப் பேசுகிறார் என்றால், அரசுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்றே அர்த்தம். வங்கதேசம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, தாங்கள் தெளிவானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர். இப்போது பாகிஸ்தான் அணி வெறும் பேச்சோடு நிற்காமல், வங்கதேசத்திற்கு ஆதரவாகச் செயலில் இறங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேசம் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் புறக்கணிப்பு கோஷத்தை முன்னெடுப்பது ஐசிசிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.