துபாய் : மகளிருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19வது ஓவர் முடிவில் 102 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த சூழலில் தற்போது குரூப் ஏ வில் இடம்பெற்றிருக்கும் இந்திய மகளிர் அணி புள்ளி பட்டியலில் அடிபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணி 2.90 என்ற ரன் ரேட் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெற்று 1.55 உடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இலங்கை அணி மைனஸ் 1.55 என்ற ரன் ரேட் உடன் இருக்கின்றது.
தற்போது இந்திய அணி நான்காம் இடத்தில் புள்ளிகள் எதுவும் இல்லாமல் மைனஸ் 2.90 என்ற புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் அரை இறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய அணி தற்போது கடைசி இடத்தில் இருப்பதால் இனி எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளுமே கிட்டத்தட்ட நாக் அவுட் மாதிரி தான்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராகவும், அடுத்த புதன்கிழமை ஒன்பதாம் தேதி இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி விளையாடுகிறது. இதை தொடர்ந்து அக்டோபர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது. இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி இலங்கையிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவை வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் முதல் சுற்றிலே இந்திய மகளிர் அணி வெளியேறக் கூடும்.