2 முக்கிய மாற்றங்கள்..பெரும் ரிஸ்க் எடுக்க துணிந்த ரோகித் சர்மா.. இங்கி, போட்டிக்கான ப்ளேயிங் 11 இதோ
அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை இந்திய அணி துணிந்து எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ப்ளேயிங் 11 மாற்றம்
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 காம்போ நன்றாகவே செட்டாகியிருந்தது. ஆனால் இந்த முக்கியப்போட்டியில் மாற்றத்தை செய்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. அதில் முதலிடத்தை பிடிப்பது தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் போட்டி தான். இதில் மீண்டும் பண்ட்-ஐ களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்
ஜிம்பாப்வே உடனான போட்டியில் பண்ட் சொதப்பினார். எனினும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களை அடித்து விளையாட மிடில் ஆர்டரில் பண்ட் போன்ற இடதுகை பேட்ஸ்மேன் தேவை. இதே போல ஓவல் மைதானத்தில் ஸ்கொயர் திசைகளில் தான் பவுண்டரி தூரம் குறைவாக இருக்கும். எனவே பந்துகளை திருப்பி அடிக்க பண்ட் சரியாக இருப்பார்.

யுவேந்திர சாஹல்?
இதே போல அணியில் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படவுள்ளதாக தெரிகிறது. அக்ஷர் பட்டேல் ஒரு பேட்ஸ்மேனாகவும் உதவுவார் என்று தான் நினைத்தனர். ஆனால் 4 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்களை தான் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடிலெய்டில் லெக் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதால் சாஹல் கொண்டு வரப்படலாம்.

ரிஸ்க்
ஆனால் யுவேந்திர சாஹல் நடப்பு தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. திடீரென ஒரு வீரரை நேரடியாக அரையிறுதிப்போட்டிக்கு களமிறக்கப்படுவாரா என்பது தான் ரிஸ்க்காகும். இந்த ரிஸ்க்-ஐ ரோகித் சர்மா எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications