ஷார்ஜா: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது வாழ்வா? சாவா? என்ற வழிகாட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி இருந்திருக்கும். இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி வீராங்கனைகள் களமிறங்கினர்.

இந்த சூழலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூவி இரண்டு ரன்களிலும் ஜார்ஜியா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். 17 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தகிலா மெக்ராத் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் தகிலா மெக்ராத் 32 ரன்களில் வெளியேற கிரேஸ் ஹாரிஸ் 42 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரி 23 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் ரேணுகா சிங் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதனை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா ஆறு ரன்களில் வெளியேற ஷபாலி வர்மா 20 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து, ஜெமிமா 16 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இந்திய மகளிர் அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் தீப்தி சர்மா 29 ரன்களில் வெளியேற இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. எனினும் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மட்டும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று ரன்களை சேர்த்தார். அவர் 47 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
இந்த சூழலில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரித் கடைசி ஓவரில் ஒரு பந்தை மட்டுமே பிடித்தார். அவர் நான்-ஸ்டிரைக்ரில் நிற்க மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர். சதர்லாந்து வீசிய கடைசி ஓவரில் இந்திய வீராங்கனைகளின் நான்கு விக்கெட்டுகள் விழுந்தது. இதனால் கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்தியா தற்போது தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நாளை நடைபெறும் பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோற்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.