
கடும் விமர்சனங்கள்
இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இதில் முகமது ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது. இதனால் ஆந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி அதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. எனினும் முகமது ஷமி இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு சுலபமாக பந்துவீசியதாக சில வஞ்சக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆக்ரோஷமடைந்த கோலி
மிகவும் பூதாகரமாக மாறிய இந்த பிரச்னை குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது பதிலளித்துள்ளார். ஒருவரை மத ரீதியாக மோசமாக பேசுவது மனிதனின் மிக கேவலமான செயலாகும். தனிப்பட்ட நபர்களிடம் நேரில் நின்று பேச தைரியம் இல்லாத முதுகெலும்பற்ற சிலரே சமூக வலைதளங்களில் தங்களது தைரியத்தை வெட்கம் ஏதும் இன்றி காட்டி வருகின்றனர்.

பேச்சு சுதந்திரம்
அனைவருக்குமே கருத்து சுதந்திரம் என்பது உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் அவர்கள் புரிந்துக்கொண்டதை தான் பேச வேண்டும். அதனைவிடுத்து ஒருவரை மதரீதியாக தாக்கி பேசுவார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது ஒரு மிகவும் கேவலமான செயலாகும்.
Recommended Video

கண்டுக்கவே கூடாது
இந்திய அணிக்காக பல முறை வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் முகமது ஷமி. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மை பவுலராக இருந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் தாக்கம் மிகப்பெரியது. அதனையெல்லாம் திரும்பி பார்க்காமல் கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்காக எனது வாழ்நாளில் ஒரு நிமிடத்தை கூட நான் செலவிட விரும்பவில்லை.

துணையாக இருப்போம்
இந்திய அணி வீரர்கள் நாங்கள் அனைவரும் முகமது ஷமியுடன் துணை நிற்போம். அவரை காயப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இன்னும் சற்று தீவிரமாக முயற்சி செய்யுங்கள். எங்களின் சகோதரத்துவம், நட்பிற்கு முன்பு அசைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு கேப்டனாக எங்கள் அணியில் எந்தவித பாகுபாடுகளும் இல்லாமல் இருப்பதை என்னால் அடித்துக்கூற முடியும் என விராட் கோலி ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications