கிறிஸ் கெயிலும் ஓய்வு?.. கடைசி போட்டியில் திடீரென கொடுக்கப்பட்ட ட்விஸ்ட்.. அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
அமீரகம்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் கெயில் ஓய்வு பெற்றுவிட்டாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது சூப்பர் 12-சுற்றின் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய போட்டியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

கடைசி போட்டி
நேற்று நடந்த கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

விடைப்பெற்ற பிராவோ
இந்நிலையில் இந்த போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு தகுதி மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்றைய போட்டியில் 12 பந்துகளை சந்தித்த அவர் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

கெயிலும் ஓய்வு
பிராவோவின் ஓய்வினால் கவலையில் உள்ள ரசிகர்களுக்கு கெயில் குறித்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில் பிராவோவுக்கு சக வீரர்கள் பேட்டை தூக்கி பிடித்து கவுரவப்படுத்தினர். அதே போன்று கெயிலுக்கும் செய்யப்பட்டது. இதனால் கிறிஸ் கெயிலும் இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என தகவல் வெளியானது.

கெயிலின் விளக்கம்
இந்நிலையில் கெயில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இதுதான் நான் விளையாடிய கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும். எனவே அதற்காக தான் கவுரவம் செய்தனர். நான் ஓய்வு எல்லாம் பெறவில்லை. எல்லாமே வதந்தி தான்.

வாய்ப்பு தேவை
எனக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது. அதாவது எனது சொந்த ஊரானா ஜமைக்காவில் ஒரு போட்டியில் ஆட வேண்டும். அங்கு என் மக்கள் முன்னிலையில் நான் ஓய்வு பெற வேண்டும். பார்க்கலாம்.. அப்படி நடக்கவில்லை என்றால் பிராவோவுடன் நானும் ஓய்வு பெற்றதாக கணக்கில் இருக்கட்டும் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications