
அஸ்வின் செயல்பாடு
3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இருந்து ஒதுக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்து வந்தது. அதிலும் கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியில் தேவை இருந்தபோதும் ப்ளேயிங் 11 வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

டி20 உலகக்கோப்பையிலும் புறக்கணிப்பு
இந்நிலையில் நீண்ட வருடம் கழித்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கோலிக்கும் அஸ்வினுக்கும் இடையே மனகசப்பு உள்ளது என்ற காரணத்தினால் தான் வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்காரும் அஸ்வினுக்காக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் அஸ்வின். அவரை ஏன் நீண்ட காலமாக அணிக்குள் சேர்க்காமல் உள்ளீர்கள். சர்வதேச அளவில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய மூத்த ஸ்பின்னராக இருக்கும் அஸ்வினை ஏன் அணியில் சேர்ப்பதில்லை என பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும்.

வீரர்களின் கவலை முகம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் 4 போட்டிகளிலும் அஸ்வினைத் தேர்வு செய்யவில்லை. தற்போது டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்தும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இது மர்மமாகவே இருக்கிறது. பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்தபின், வீரர்கள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. பயோபபுள், மன அழுத்தம் போன்றவை வீரர்கள் நம்பிக்கையற்று இருக்க காரணமாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இதனால் பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications











