
டி20 உலகக்கோப்பை போட்டி
அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்கள் பெரியளவில் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் மோதிய இந்த இரு அணிகளும் 2 வருடங்கள் கழித்து தற்போது அக்டோபர் 24ம் தேதியன்று டி20 உலகக்கோப்பை தொடரில் மோதவுள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாக். வீரர் அச்சுறுத்தல்
உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியே கண்டதில்லை. இந்த முறையும் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த படையாக இருப்பது போன்று தெரியவில்லை. எனினும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இளம் வீரர் பாபர் அசாம் மட்டும் ஒற்றையாளாக இந்திய அணியை சாய்க்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர். 26 வயதே ஆகும் பாபர் அசாம் விராட் கோலியை மிஞ்சும் அளவிற்கு ரெக்கார்ட்டுகளை வைத்துள்ளார்.

புள்ளிவிவரம்
பாபர் அசாம் கடந்த 5 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஃபார்மில் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட கோலியை போன்றே பாபரும் வளர்ந்து வருபவர் என்றே கூறலாம். 32 வயதாகும் விராட் கோலி சர்வதேச அளவில் இதுவரை 84 இன்னிங்ஸ்களில் விளையாடி 3159 ரன்கள் குவித்துள்ளார். இதில் 28 அரைசதம் அடங்கும். அவரின் சராசரி 52.65 ஆக உள்ளது. இதே போல பாபர் அசாம் இதுவரை 56 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 2204 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். சராசரி 46.89 ஆக உள்ளது.

தற்போதைய ஃபார்ம்
விராட் கோலி அதிகப்போட்டிகளில் விளையாடியிருப்பதால் மட்டுமே ரன் விகிதங்களில் பட்டியலில் மேலே உள்ளார். மற்றபடி விராட் கோலி இளம் வீரராக இருந்தபோது எதிரணிகளுக்கு எந்த அளவிற்கு அச்சுறுத்தல் கொடுத்தாரோ, அதே திறமை பாபர் அசாமிடமும் உள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்காக நடைபெற்ற பயிற்சி போட்டியில் கூட அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அப்போட்டியில் அரைசதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். எனவே அவருக்காக தனி வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications