இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக ஐசிசி ஸ்பெஷல் ஏற்பாடு.. மெல்பேர்ன் மைதானத்தில் யாருக்கு சாதகம்
சென்னை: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது ஐசிசி.
2022ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பைகான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் மொத்தம் 7 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அக்டோபர் 23ம் தேதியன்று தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. தொடக்கமே சரவெடி என்பது போல பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. இப்போட்டி உலகப்புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பழிவாங்குமா இந்தியா
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை தான் எதிர்கொண்டது. ஆனால் அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. எனவே அதற்கு பழிவாங்கும் விதமாக மீண்டும் முதல் போட்டியிலேயே மோதவிட்டுள்ளது ஐசிசி.

பார்வையாளர்களுக்கான ஏற்பாடு
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால் மெல்பேர்ன் மைதானத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் எதிர்பார்ப்புகளும் ஏக போகத்திற்கு எகிறியுள்ளது.

மெல்பேர்ன் மைதானம்
மெல்பேர்ன் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை டி20யில் மோதியது கிடையாது. எனினும் தனித்தனியாக விளையாடியுள்ளன. மெல்பேர்னில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. பாகிஸ்தான் அணி இங்கு ஒரே ஒரு டி20யில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. எனவே புதிய மைதானத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications