
பறிபோன அரையிறுதி வாய்ப்பு
முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அரையிறுதி செல்வதற்கு சிறிய வாய்ப்பு ஒன்று இருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை பிடித்துக்கொண்டது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கடைசி போட்டி
இந்த உலகக்கோப்பை தொடர் தான் விராட் கோலி கேப்டனாக செயல்பட போகும் கடைசி தொடராகும். அதில் இன்று கடைசி லீக் போட்டி நடைபெறவிருக்கிறது. நமீபியா அணிக்கு எதிரான இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

பிட்ச் ரிப்போர்ட்
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்கு சுவாரஸ்ய விஷயம் காத்துள்ளது. துபாய் மைதானத்தை பொறுத்தவரை பனியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே இங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும். இந்த களத்தில் பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டுக்குமே சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிறந்த ஆட்டம்
ஸ்காட்லாந்து போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து குறைந்த ரன்களுக்கு ஸ்காட்லாந்தை சுருட்டியது. எனவே இந்த போட்டியிலும் இந்திய அணி வெகு விரைவாக நமீபியாவை சுருட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடினாலும், பிட்ச் சிறப்பாக இருப்பதால் தொடக்கத்திலேயே அதிரடி வேட்டையை பார்க்கலாம். எனவே கேப்டனாக கோலி விளையாடும் கடைசி ஆட்டம் மிகப்பெரும் வெற்றியுடன் தான் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











