
பதவி விலகிய கோலி
இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் நமிபியாவுடன் மோதியது. இந்த போட்டி தான் கோலி கேப்டன்சியில் விளையாடும் கடைசி போட்டியாகும். இதில் அவருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை வீரர்கள் பெற்றுக்கொடுத்தனர். கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் சோகம்
டி20 உலகக்கோப்பை தொடரில் சொதப்பிய கேப்டன் கோலி, மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதனால் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

விளக்கமளித்த கோலி
இந்நிலையில் விராட் கோலி, தனது ஓய்வு எப்போது என்பது குறித்து பேசியுள்ளார். நமிபியா போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர், பெரும் அழுத்தங்களில் இருந்து வெளியேறியது போன்று உணர்கிறேன். நான் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது மிகப்பெரிய கவுரவம். என்னுடைய பணிச்சுமையை குறைக்க இதுதான் சரியான நேரம். 6-7 வருடங்களாக அதிகமான பணிச்சுமை இருந்தது. இதனால், அழுத்தங்களும் அதிகமாக இருந்தது. அரையிறுதிக்கு செல்ல முடியாது எனத் தெரியும். இருந்தாலும் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

ஓய்வு எப்போது?
நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன். களத்தில் என்னுடைய உற்சாகமும், ஆக்ரோஷமும் கொஞ்சம் கூட குறையாது. ஒருவேளை களத்தில் என்னுடைய ஆக்ரோஷம் குறையும்போது நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன். நான் கேப்டனாக இல்லாத காலகட்டத்தில்கூட நான் ஒவ்வொரு போட்டியும் எவ்வாறு செல்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருப்பேன். நான் தனி ஆளாக நின்றுகொண்டிருக்கமாட்டேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











