
முக்கிய ஆட்டம்
குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுவிட்ட நிலையில், 2வது இடத்திற்காக இந்திய அணி போராடி வந்தது. இன்று நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு சென்றிருக்கும். ஆனால் அதற்கு முடிவு கட்டிவிட்டது நியூசிலாந்து.

தொடக்கம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் ஹச்ரதுல்லா (2), முகமது செஷாத் (4) என அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த குர்பாஸ் (6), குல்பாதின் (15) ஆகியோரும் ஏமாற்றமே கொடுத்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது.

எளிய இலக்கு
அந்த அணியில் அனைத்து வீரர்களும் சொதப்ப நஜிபுல்லா மட்டுமே ஒற்றையாளாக போராடினார். 48 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.

அபார வெற்றி
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி வெகு சீக்கிரமாக வெற்றி பெற வேண்டும் என நினைத்து அதிரடி காட்டியிருந்தால் தோல்வியடைய வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் சாதூர்யமாக விளையாடிய அந்த அணி எந்தவித அதிரடியையும் காட்ட விரும்பாமல், நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மார்டின் கப்தில் (28), டாரில் மிட்செல் (17), கேன் வில்லியம்சன் (40), டேவன் கான்வே (36) என ரன் சேர்க்க 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றனர்.

வெளியேறிய இந்தியா
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி நுழைந்துவிட்டது. பெரிய கனவோடு இருந்த இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications