T20 WorldCup: “ஆரம்பமே பிரச்னையா”.. இந்தியாவை வம்புக்கிழுத்த பாகிஸ்தான்.. ஜெர்ஸியில் அரசியல்?
அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி இந்தியாவை சீண்டியுள்ளது.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தகுதிச்சுற்று போட்டிகல் ஓமனிலும், சூப்பர் 12 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது பாகிஸ்தான்.

ஜெர்ஸி சண்டை
டி20 உலகக்கோப்பை தொடர் முதலில் இந்தியாவில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதாகத்தான் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பை ஜெர்சியில் 'ஆடவர் டி20 உலகக் கோப்பை இந்தியா 2021' என்றுதான் அச்சிடப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் ஐசிசி உத்தரவிட்டது.

புதிய சர்ச்சை
இதனையடுத்து அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டு அனைத்து நாடுகளும் இந்தியாவின் பெயரை ஜெர்சியில் அச்சிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மட்டும் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது. பாகிஸ்தான் அணியின் டி20 உலகக்கோப்பை ஜெர்ஸி இன்று வெளியிடப்பட்டது. அதில் இந்தியா என்பதற்கு பதிலாக 'ஆடவர் டி20 உலகக் கோப்பை யுஏஇ 2021' என அச்சிட்டுள்ளது.

பாகிஸ்தான் செய்த தவறு
ஐசிசியின் விதிமுறைகளின்படி பாகிஸ்தான் செய்தது தவறாகும். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியலையும் விளையாட்டையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒன்றாக பார்ப்பதாக கூறி விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ இன்னும் ஐசிசியிடன் புகாரளிக்கவில்லை. ஐசிசி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி அக்டோபர் 24ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு துபாயில் துவங்கும். இரு அணிகளும் 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதால் இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications