
வீரர்கள் அறிவிப்பு
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தனக்களது வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை ஏற்கனவே தங்களது அணியை அறிவித்துவிட்டன.

ஆஃப்கானிஸ்தான் அணி
இந்நிலையில் சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தாலிபான்கள் பிடியில் அந்நாடு உள்ளதால், கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இறுதியில் தாலிபான்கள் விளையாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல, எனவே கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி உண்டு எனக்கூறப்பட்டு 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷித் கான்
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் ராஜினாமா செய்தார். அணி வீரர்களின் தேர்வின் போது ஒரு கேப்டனாக ரஷித் கானிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனத்தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார்.

வருத்தம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஷித் கான், ஒரு கேப்டனாகவும், தேசத்திற்காக விளையாடும் வீரராகவும், எனக்கு தேர்வுக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு. ஆனால் ஆஃப்கான் கிரிக்கெட் வாரியமும், தேர்வுக் குழுவும் எனது கருத்தை எதையுமே கேட்காமல் அணியை அறிவித்துள்ளது. எனவே நான் கேப்டன் பதவியில் இருந்து தற்போதே விலகுகிறேன். தேசத்திற்காக என்றுமே பெருமையாக நினைத்து விளையாடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கேப்டன் நியமனம்
ரஷித் கானின் குற்றச்சாட்டுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காத ஆஃப்கான் கிரிக்கெட் வாரியம், உடனடியாக புதிய கேப்டனை நியமித்துவிட்டது. அதாவது அந்த அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் முகமது நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முகமது நபி, இந்த இக்கட்டான சூழலில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications