
கடைசி லீக் போட்டி
இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்குமே மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதே போல இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுக் கொடுக்காததால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன் வரவில்லை.

உருகிய ரவி சாஸ்திரி
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு ரவி சாஸ்திரியை வழியனுப்பி வைக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ரவி சாஸ்திரி, கடந்த 5 வருடங்களில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து நான் நன்கு அறிவேன். உலகின் சிறந்த அணிகளை 3 வடிவ கிரிக்கெட்டிலும் நாம் வீழ்த்தியுள்ளோம். அந்த அளவிற்கு பலமிக்க அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய அணிதான் பலமிக்க அணி என்று நான் கூற விரும்பவில்லை. எனினும் உலகின் பலமான அணிகளில் இந்தியாவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. வீரர்கள் அச்சமில்லாமல் விளையாடுகிறார்கள். வெற்றி ஆசை அவர்களிடம் நிறைய இருக்கிறது. எப்படிப்பட்ட மைதானங்களிலும் தங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் உள்ளது. இங்கிலாந்து தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறோம். ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும்போது நான் வர்ணனையாளராக இருப்பேன். சிறப்பாக விளையாடுங்கள்.

சரி செய்யுங்கள்
டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது எனக்கு ஏமாற்றமே. சாக்கு போக்கு கூறுவதை நான் விரும்ப மாட்டேன். நியூசிலாந்துக்கு எதிராக நாம் தைரியமாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை. அடுத்த உலகக்கோப்பை தொடருக்குள் நாம் கற்ற பாடத்தை சரி செய்ய வேண்டும். ஐபிஎலுக்கும், உலகக் கோப்பைக்கும் கொஞ்சம் இடைவேளை இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஓய்வறையில் இருந்து பெருமைமிக்க மனிதராக வெளியேறுகிறேன் என ரவி சாஸ்திரி விடை பெற்றார்.


Click it and Unblock the Notifications