மும்பை: தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சியின் ILT20 தடையில்லாச் சான்றிதழை நீட்டித்து, சட்டச் செலவுகளையும் செலுத்துமாறு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு ஜோகன்னஸ்பர்க் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஎஸ்ஏ-வுக்கு எதிராக ஷம்சி தொடுத்த வழக்கில் அவருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ILT20 லீக்கிற்கான தனது NOC-ஐ நீட்டிக்க சிஎஸ்ஏ மறுத்ததே இந்த வழக்கில் முக்கியப் பிரச்சினையாகும்.இந்த ஆண்டு தொடக்கத்தில், வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக, எம்ஐ கேப் டவுன் அணியுடனான தனது SA20 ஒப்பந்தத்திலிருந்து ஷம்சி விலகினார்.

அவரது ஒப்பந்த ரத்தை SA20 ஏற்றுக்கொண்டது. பின்னர் அவர் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்தாலும், அவருக்கு தடையில்லா சான்றிதழ் தரப்படவில்லை. இதனையடுத்து ஷம்சி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ILT20-க்கான ஷம்சியின் NOC-ஐ லீக்கின் இறுதி நாளான ஜனவரி 4 வரை நீட்டித்து, சட்டச் செலவுகளையும் செலுத்த சிஎஸ்ஏ-க்கு உத்தரவிட்டது. அவரது பிக் பாஷ் லீக் (BBL) ஒப்பந்தத்திற்கும் சிஎஸ்ஏ தனி NOC வழங்கியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஷம்சி, 'என் நிலைமையின் அவசரத்தை நீதிமன்றம் அங்கீகரித்து இடைக்கால நிவாரணம் வழங்கியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல நான் தயங்கினேன். ஆனால் வேறு வழிகளில் தீர்வு காண முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தெளிவைக் கொண்டுவர இது அவசியமானது. இது வாய்ப்புகளை அதிகப்படுத்துவது பற்றியது அல்ல’ என்று தெரிவித்தார்.
'என் வாழ்க்கையைச் சிந்தித்து, நீடித்த முறையில் அணுக முடிவது பற்றியதே. கணவனாகவும் தந்தையாகவும், என் மனைக்கும் இளைய குழந்தைக்கும் எது சரியோ அதைச் செய்ய வேண்டியிருந்தது. சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தேவைகளுடன் என் குடும்பத்தின் பொருளதாரத்தை உறுதி செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து நான் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு, கிரிக்கெட் உலகில் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வாரியங்களுக்கும், உள்நாட்டுப் போட்டிகளைத் தவிர்த்து டி20 லீக்குகளில் விளையாட விரும்பும் வீரர்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக, இது ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமைகிறது.
உதாரணமாக, சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2025 ஆண்கள் ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியால் பெரும்பாலான வீரர்களுக்கு NOC-களை மறுத்தது. அது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலையீட்டால்தான் மாற்றப்பட்டது. ஷம்சியின் இந்த வழக்கு, NOC-கள் மறுக்கப்படும்போது தங்கள் வாரியங்களுக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு தொடர உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களைத் துணிச்சலை கொடுத்துள்ளது.