இந்தியா -இங்கிலாந்து மோதல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் ஏ அணியில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவும் பி அணியில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
குழுவாக தயார் -கேப்டன்
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சமாளிக்க தாங்கள் குழுவாக தயாராக உள்ளதாக அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் கருத்து
இதனிடையே இந்திய ஸ்பின்னர்களை சமாளிப்பது மிகவும் கடினமான செயல் என்று இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் தெரிவித்துள்ளார். கடந்த உலக கோப்பையில் இந்திய ஸ்பின்னர்சை சமாளிக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டு வீழ்த்தியதாக தெரிவித்த அவர், தற்போது பூனம் யாதவ் மிக அதிகமான திறமையுடன் காணப்படுவதாகவும் அவரை சமாளிப்பது மிகவும் கடினம் என்றும், ஆனால் தாங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹெதர் நைட் உறுதி
இதனிடையே இந்திய அணிக்காக நாளை மோதவுள்ள அரையிறுதிப் போட்டியில் திட்டமிட்டு செயல்படுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அணியில் பேட்டிங்கிலோ அல்லது பௌலிங்கிலோ பல்வேறு திறமைகளை கொண்ட வீராங்கனைகள் உள்ளதாகவும் தாங்கள் எந்தவிதமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமாளிக்கும் திறமை
மேலும் தொடரின் சில போட்டிகளில் மழை குறுக்கீட்டால் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்து சுட்டிக்காட்டிய ஹெதர் நைட், மழை குறுக்கீட்டில் ஓவர்கள் குறைக்கப்பட்டால், அதிரடியாக விளையாடும் வகையில் திறன்மிக்க வீராங்கனைகள் தங்களது அணியில் உள்ளதாகவும், அனைத்தையும் சமாளித்து இந்தியாவை அரையிறுதியில் வெற்றி கொள்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.