
திடீர் தாமதம்
இந்த போட்டிக்கான டாஸ் இரவு 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சூழலில் தாமதமானது. மழைப்பொழிவு, வெளிச்சமின்மை என எந்தவொரும் பிரச்சினையும் இன்றி டாஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் குழம்பினர். எனினும் டாஸ் தாமதமானாலும், திட்டமிட்டபடியே போட்டி 9.30 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் இந்த குழப்பத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக கொரோனா பரிசோதனை எடுப்பது வழக்கம். அந்தவகையில் இன்று எடுக்கப்பட்ட சோதனையில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மெக்ரத்திற்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு அறிகுறிகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

தனிமைப்படுத்துதல்
நீண்ட நேரமாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தஹிலா விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து தேசியகீதம் ஒலிக்கப்பட்ட போது, அவர் அணியினருடன் களத்தில் இல்லாமல் வெளியே இருந்தார். இதே போல டக் அவுட்டில் தனியாக மாஸ்க் அணிந்தவாறு இருந்தார். தனது பேட்டிங்கிற்கு மட்டுமே வந்து செல்ல அனுமதி கிடைத்தது.

அடித்த ஸ்கோர்
இத்தனை பிரச்சினைகளுக்கு இடையே முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது. கொரோனா பாதிப்புடன் விளையாடிய தஹிலா மெக்ராத் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


Click it and Unblock the Notifications











