கராச்சி: பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான முகமது ஆசிப், சல்மான் பட், முகமது ஆமீர் ஆகியோரின் தண்டனை காலம் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் திரும்பவும் வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் ஏங்கிக்கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகாலம் தடைக்கு உள்ளான மேற்கண்ட 3 வீரர்களுக்கும் தடைக்காலம் தற்போது முடிந்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவோடு தடைக்காலம் முடிவடைந்திருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் இவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, ஆசிப் கூறுகையில், "நான் பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தடையின்றி சுற்றித் திரிய முடியும் என்பதே எனக்கு இப்பதைக்கு போதும். பாக். அணிக்குள் நுழைவது கஷ்டம் என்பதை உணர்ந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
வீரர்கள் ஒழுங்குடன் நடப்பதை வாரியம் உறுதி செய்தால் மீண்டும் இவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.