ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்.. பச்சைக்கொடி காட்டிய தாலிபான்கள்.. முதல் தொடரே பாகிஸ்தான் அணியுடன் தான்!
சென்னை: தாலிபான்களின் ஆட்சி அமைந்துள்ள சூழலில், ஆஃப்கானிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டியை துணிந்து நடத்தவுள்ளது பாகிஸ்தான்.
Recommended Video
அமெரிக்க படைகள் ஆஃப்கானில் இருந்து வெளியேறியதில் இருந்து, ஆஃப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வெற்றி கண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்த உள்நாட்டு போரில் பல மாகாணங்களை தாலிபான்கள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்தில் ஆஃப்கானின் தலைநகர் காபூலை சுற்றி வளைத்த அவர்கள், ஒட்டுமொத்த அதிபர் அலுவலகத்தையும் கைப்பற்றி தங்களது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்துள்ளனர்.

தாலிபான் அமைப்பு
தாலிபான்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை அதிபர் சலேவும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருத்தரப்புக்கும் சுமூகமான முடிவுகளை தருவதற்காக இடைக்கால அதிபராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இடைக்கால அரசு என்னும் யோசனையை தாலிபான்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான்
இதனால் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அணியும் டாப் 10 இடங்களை பிடித்து வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எனவே இனி அந்த அணியால் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

ஒருநாள் போட்டி தொடர்
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இரு அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தாலிபான்களின் தாக்குதல்களால் அது நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

தாலிபான்களின் நிலைப்பாடு
இந்த கிரிக்கெட் தொடர் குறித்து தாலிபான்களிடம் முறையிடப்பட்டதாகவும், அதற்கு அந்த அமைப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தெரிகிறது. அவர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு எந்தவித பிரச்னை இல்லை எனத்தெரிவித்தாக கூறப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

பயிற்சி தொடங்கியது
பாகிஸ்தான் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி 2வது டெஸ்ட் முடிந்தவுடன் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வீரர்கள் விவரம் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போல ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே காபூலில் தங்களது முதற்கட்ட பயிற்சியை தொடங்கிவிட்டனர். வரும் 29ம் தேதியன்று இரு நாட்டு வீரர்களும் இலங்கை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் எதிர்காலம் என்ன?
ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடர், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து மும்முணை போட்டியில் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு தாலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்தடுத்த தொடர்களுக்கு பிரச்னை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications