யார் இந்த நிவேதன்
கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நிவேதன் ராதா கிருஷ்ணன். இவர் உள்நாட்டு தொடர்களில் தமிழக அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இதுமட்டுமின்றி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரிலும் தனது திறமைகளை நிரூபிக்க முயற்சித்துள்ளார். இவை அனைத்திற்கும் மேல் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் நெட் பவுலராகவும் நிவேதன் செயல்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது அவரின் பெயர் யாருக்கும் தெரியாது.
எப்படி நிகழ்ந்தது
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியுரிமை பெற்ற அவர், அங்கு நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார். இதனை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அரிதான திறமை
நிவேதனுக்கு இருக்கும் மிகவும் அரியதான திறமையை கண்டு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை சேர்த்துக்கொண்டது. அதாவது சுழற்பந்துவீச்சாளர் நிவேதனால் வலது, இடது என இரண்டு கைகளிலும் பவுலிங் வீச முடியும். அதுவும் இரண்டு கைகளிலும் ஒரே மாதிரியான செயல்பாட்டை வைத்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.
நிவேதனின் துணிச்சல் பேச்சு
இதுகுறித்து பேசிய நிவேதன் ராதாகிருஷ்ணன், நான் சிறுவயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன். ஆனால் ஒருவர் கூட இரண்டு கைகளிலும் பந்துவீசும் திறமை வைத்திருந்ததில்லை. அதனை நாம் ஏன் முயற்சிக்க கூடாது என நினைத்தேன். அதன் பலன் தான் தற்போது கிடைத்துள்ளது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை, வீழ்ந்தாலும், நான் முடிந்தவரை போராடிக்கொண்டே தான் இருப்பேன் என கூறினார்.