சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல திறமையான வீரர்களை உருவாக்கி இருந்தாலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே தவற விட்டிருக்கிறது.
அப்படி சென்னை அணியில் விளையாடாமல் வேறு அணிக்குச் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்தவர் தான் சாய் கிஷோர். 26 வயதான சாய் கிஷோர் இரண்டு ஐபிஎல் பட்டம்,பல டிஎன்பிஎல் பட்டம், விஜய் ஹசாரோ கோப்பை, சையது முஸ்தாக் கோப்பை என பல பட்டங்களை பெற்று இருக்கிறார்.

முதலில் சுழற் பந்துவீச்சாளராக அறியப்பட்ட சாய் கிஷோர் பிறகு பேட்டிங்கில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ஒரு ஆல் ரவுண்டராக வளம் வருகிறார். இது குறித்து பேசிய அவர் தற்போது என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் அணுகி வருகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போது எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கிறது. நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் எப்படி விளையாடி சந்தோஷமாக இருந்தேனோ அதேபோல் தான் தற்போதும் இருக்கிறேன்.
ஒரு தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்று யோசித்தால் நமது எண்ணங்களும் சக்திகளும் அதை நோக்கி தான் செல்லும் என நினைக்கிறேன். என்னுடைய கிரிக்கெட்டில் நான் இன்னும் முன்னேற வேண்டும் என நினைக்கிறேன். நான் கடின உழைப்பால் தற்போது இதுவரை முன்னேறி வந்திருக்கிறேன். ஆனால் இது போதாது. இன்னும் நான் என்னுடைய கிரிக்கெட்டை முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆல்ரவுண்டர் என்பது வெறும் பெயர்தான். ஆனால் நிச்சயம் என்னால் பேட்டிங் செய்ய முடியும். சூழல் வரும்போது பேட்டிங் மூலம் அணிக்கு வெற்றியை நான் தேடி கொடுக்க விரும்புகிறேன். தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் கூட அணிக்கு ஒரு முக்கியமான ஆட்டத்தை பேட்டிங்கில் நான் வெளிப்படுத்தினேன். தற்போது உள்ள கிரிக்கெட் சூழலில் பந்துவீச்சாளர்களுக்கும் பேட்டிங் செய்ய தெரிந்திருப்பது அவசியம்.
தற்போது சுழற் பந்துவீச்சாளராக இருந்தால் மட்டும் இந்திய அணியில் இடம் கிடைக்காது. பேட்டிங்கும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் எனக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். அதற்காகவே நான் பேட்டிங் செய்கின்றேன். பேட்டிங்கில் என்னுடைய முன்னேற்றம் தெரிவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்திய அணியில் இடம் கிடைப்பது என்பதெல்லாம் என் கையில் இல்லை. அதை தேர்வு குழுவினர் தான் பார்க்க வேண்டும். தற்போது என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன் என்று சாய் கிசோர் கூறியுள்ளார்.