
தமிழக பந்துவீச்சாளர்கள் அசத்தல்
தமிழ்நாடு அணி தரப்பில் வாரியர் 5 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து இரண்டாம் நாளின் உணவு இடைவேளைக்கு பின் தமிழக அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட் மனநிலையில் விளையாட, ஜெகதீசனோ டி20 கிரிக்கெட் மனநிலையில் வெளுத்து வாங்கினார்.

ஹைதராபாத் 258 ரன்களுக்கு ஆல் அவுட்
தொடர்ந்து ஜெகதீசன் 97 பந்துகளில் 116 ரன்களும், சாய் சுதர்சன் 179 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அபராஜித் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் சேர்க்க, தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் இரண்டாவது இன்னிங்ஸில், 258 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

12 ஓவர்களில் 144 ரன்கள் இலக்கு
நான்காம் நாளில் கிட்டத்தட்ட முடிவடைந்திருந்த நிலையில், 144 ரன்கள் இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. சரியாக 11 ஓவரில் 144 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை களமிறங்கியது. தொடக்கம் முதலே சிக்சர் மட்டுமே அடிக்க வேண்டும் என்று குறியாக இருந்த இருவரும், அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி தள்ளினர். கிட்டத்தட்ட 6.4 ஓவரிலேயே தமிழ்நாடு அணி 100 ரன்களை எட்டியது.

13 சிக்சர்கள்
இதனிடையே சாய் சுதர்சன் 20 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்றிருந்த ஜெகதீசன் 22 பந்துகளில் 8 சிக்சர் உட்பட 60 ரன்கள் எடுத்திருந்தார். 7 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 108 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஹைதராபாத் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டனர். இதன்பின்னர் நடுவர்களால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

3 புள்ளிகள்
இன்னும் 2 ஓவர்கள் வீசி இருந்தால், தமிழ்நாடு அணி வெற்றிபெற்றிருக்கும் என்ற நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகளும், ஹைதராபாத் அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











