சென்னை: ரஞ்சி கோப்பைக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேரளாவைச் சேர்ந்த சுனில் சாம் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது ரஞ்சி கோப்பை. இதில் மாநில கிரிக்கெட் அணிகள் மோதும். மாநில அணியில் இடம் பிடிப்பது என்பதே குதிரை கொம்பு தான்.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான தமிழ்நாடு அணியில் கேரளாவைச் சேர்ந்த வீரர் சுனில் சாம் சேர்க்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான சுனில் சாம், கடந்த ரஞ்சி கோப்பை போட்டியிலும் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு 5 போட்டிகளில் 13 விக்கெட்களை எடுத்தார்.
அவரது சிறப்பான ஆட்டம் காரணமாகவே தமிழக அணியில் அவர் மீண்டும் இடம்பிடித்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அணியின் கேப்டன் பத்ரிநாத் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
அவருக்கு பதிலாக இந்திய அணி சார்பாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தி செல்வார். நவம்பர் 3ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு, பரோடா அணியை சந்திக்க உள்ளது.
தமிழ்நாடு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பெயர்கள் பின் வருமாறு,
பாலாஜி(கேப்டன்), அபினவ் முகுந்த், முரளி விஜய், எம்.கௌஷிக் காந்தி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பி. அபராஜித், ஸ்ரீ வாசுதேவ தாஸ், ஆர். பிரசன்னா, விஜய் சங்கர், யோமகேஷ், சுனில் சாம், ஜெ.கௌஷிக், ஆர். ஔசிக் ஸ்ரீநிவாஸ், சன்னி சுரேஷ் குப்தா.