மும்பை : ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு அணி 7 ஆண்டுகளுக்கு பின் விளையாடி வருகிறது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்சில் அதிகளவில் புற்கள் இருந்த போதும் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறான முடிவு என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

அதற்கேற்றபடி முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் விளாசினர். தொடர்ந்து மும்பை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான், ஷர்துல் தாக்கூர் மற்றும் கொஷியன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் சுழலில் சிக்கிய மும்பை அணியின் லால்வானி 15 ரன்களிலும், மோகித் 2 ரன்களிலும், கேப்டன் ரஹானே 19 ரன்களிலும், முஷீர் கான் 55 ரன்களிலும், முலானி டக் அவுட்டாகியும் வெளியேறினர். அதிலும் கேப்டன் ரஹானே எல்பிடபிள்யூ ஆன போது நடுவர் பக்கம் திரும்பாமல் கண்டிப்பாக அவுட் என்று கொண்டாடியது ஆச்சரியம் அளித்தது.
இதன் மூலம் ரஞ்சி டிராபி அரையிறுதியில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் எலைட் பிரிவில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சாய் கிஷோர் படைத்துள்ளார். இந்த ரஞ்சி சீசனில் மட்டும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் கிஷோர் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் சாய் கிஷோர் நிச்சயம் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய ஏ அணியிலும் சாய் கிஷோர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வாஷிங்டன் சுந்தரை போல் பேட்டிங் மற்றும் சுழலில் தரமான வீரர் என்பதால், சாய் கிஷோர் இந்திய ஏ அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.