சென்னை: தமிழ்நாடு இளம் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடங்கிய சாய் சுதர்சனின் விஸ்வரூபம், அடுத்தடுத்த தொடர்களில் அதிகரித்து கொண்டே செல்கிறது. டிஎன்பிஎல், இந்தியா ஏ அணி என்று சாய் சுதர்சனின் அதிரடியில் வேறு லெவல் வீரராக மாறினார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு சாய் சுதர்சன் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்பாகவே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்படவுள்ளார். இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் சர்ரே அணிக்காக கடைசி 3 போட்டிகளில் விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்ரே அணியின் இயக்குநர் அலெக் ஸ்டீவர்ட் பேசுகையில், நான் மதிக்கும் இந்திய ஜாம்பவான் வீரர்கள் சிலர், சாய் சுதர்சனை பற்றி பெரியளவில் கூறினார்கள்.
இதனால் கடைசி 3 போட்டிகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். செப்.3ஆம் தேதி சர்ரே அணி வார்விக்ஷையர் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. அந்தப் போட்டியிலேயே சாய் சுதர்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேன் அப்பாட் மற்றும் டாம் லேதன் ஆகியோர் தேசிய அணிகளுக்கு திரும்பியுள்ளதால், ரோச் மற்றும் சாய் சுதர்சனை சர்ரே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் புஜாரா, அஸ்வின், அர்ஷ்தீப் சிங், உனாத்கட் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். அண்மையில் பிரித்வி ஷா கூட ராயல் லண்டன் ஒன் ரே கோப்பையில் விளையாடி ஃபார்மை மீட்டெடுத்தார். தற்போது தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி அணிகளுடன் நிர்வாகிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் நல்ல நட்புடன் இருக்கிறார். அதேபோல் தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி அஸ்வின் தொடர்ந்து பல்வேறு மேடைகளிலும் பெருமையாக பேசி வருகிறார். இதனால் சாய் சுதர்சனின் இங்கிலாந்து கவுண்டி ஒப்பந்தத்திற்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.