
உலக புகழ்பெற்ற மைதானம்
1916ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த புகழ்வாய்ந்த மைதானத்தில் இன்று வரை பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சேப்பாக்கம் மைதானத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் போராட்டம்
ஆனால், இந்த மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புராதன சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதை மட்டும் இடித்து புதுப்பிக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசிடம் அனுமதி கோரி வந்தது.

எத்தனை சதுர அடி விரிவாக்கம்
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை புதுபித்தும், விரிவுப்படுத்தியும் கட்டுவதற்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி 62 ஆயிரம் சதுர அடியில் உள்ள இந்த மைதானத்தை 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யவுள்ளனர். இதற்கான செலவு மொத்தம் ரூ.139 கோடி ஆகும்.

கிடைக்கப்போகும் பலன்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது வரை 50 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கலாம். இந்த மைதானம் இடித்துக்கட்டப்படுவதால், கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் என மொத்தம் 86 ஆயிரம் பேர் அமரும் வசதி கிடைக்கும். மேலும் இந்தியாவில் அதிகளவில் பார்வையாளர்கள் அமரக்கூடிய மைதானங்களில் சென்னையும் இடம்பெறும். சர்வதேச போட்டிகளும் அதிகரிக்கும்.

18 நிபந்தனைகள் விதிப்பு
ஆனால் இதனை விரிவுப்படுத்துவதற்கு 18 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதாவது நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் செய்யக்கூடாது; மரங்களை வெட்ட அனுமதியில்லை, அப்படி வெட்டினால், வேறு இடத்தில் புதிய மரம் நடப்பட வேண்டும். அருகில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 18 நிபந்தனைகள் உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தையும் ஏற்றும் மைதானம் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











