குஜராத்தை ஓடவிட்ட தமிழ்நாடு.. 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மணிமாறன் சித்தார்த்.. மிரட்டல் வெற்றி!
சென்னை: புச்சி பாபு தொடரில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. தமிழக இளம் வீரர் மணிமாறன் சித்தார்த் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சி பாபு தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான 2வது சுற்றுப் போட்டியில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய 391 ரன்களை விளாசியது. இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணி 125 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.

அப்போது களமிறங்கிய 17 வயதே ஆன ஆண்ட்ரூ சித்தார்த் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் 55 ரன்களை சேர்த்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ லெவன் அணி 211 ரன்கள் எடுத்தது. கிட்டத்தட்ட டிரா செய்தாலே குஜராத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை ஏற்பட்டதால், தமிழக ரசிகர்கள் சோகமடைந்தனர். மொத்தமாக 170 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 2வது இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு வீரர்களான மணிமாறன் சித்தார்த் மற்றும் விக்னேஷ் இருவரும் மிரட்டலான அட்டாக்கை வெளிப்படுத்தினர். மணிமாறன் சித்தார்த் சுழலில் குஜராத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 58 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த மணிமாறன் சித்தார்த் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல் வினேஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து டிஎன்சிஏ அணியின் வெற்றிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் 2வது இன்னிங்ஸில் ஆன்ட்ரூ சித்தார்த் நம்பர் 3ல் களமிறங்கி ஸ்பின்னர்களை பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர் 94 பந்துகளில் 4 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 115 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன் மூலமாக டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதல் இன்னிங்ஸில் கோட்டைவிட்டாலும், 2வது இன்னிங்ஸில் தமிழக வீரர்கள் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளனர். குறிப்பாக மணிமாறன் சித்தார்த்தின் பவுலிங் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மும்பை அணியை சாய் கிஷோர் மற்றும் அர்ஜுன் ராம் அலறவிட்ட நிலையில், தற்போது விக்னேஷ் மற்றும் மணிமாறன் சித்தார்த் இருவரும் குஜராத் அணியை ஓடவிட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு வீரர்களின் சுழற்பந்துவீச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் தொடரின் போது மணிமாறன் சித்தார்த் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications