கோவை: சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரர் நாராயண் ஜெகதீசன் முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி டிராபி தொடரின் குரூப் சுற்று போட்டியில் சண்டிகர் அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சண்டிகர் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்திருந்தது.

ஏற்கனவே தமிழ்நாடு அணி 110 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த சூழலில், இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. சதம் விளாசிய ஜெகதீசன் - பிரதோஷ் ரஞ்சன் பால் கூட்டணி பேட்டிங்கை தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய பிரதோஷ் சதம் விளாசி அசத்தினார். இருப்பினும் அவர் 105 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜெகதீசன் - இந்திரஜித் கூட்டணி இணைந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 280 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ஆடிய ஜெகதீசன் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். மறுபக்கம் பவுண்டரிகளாக விளாசிய இந்திரஜித்தும் சதம் விளாச, தமிழ்நாடு அணியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்றது. சிறப்பாக ஆடிய அவர் 123 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஜெகதீசனுக்கு முச்சதம் விளாசும் வாய்ப்பு அமைந்தது.
இதனால் தமிழ்நாடு அணி டிக்ளேர் செய்யும் முடிவை ஒத்தி வைத்தது. அதிரடியாக ஆடிய ஜெகதீசன் முச்சதம் விளாசி அசத்த, தமிழ்நாடு அணியின் ஸ்கோர் 600 ரன்களை நெருங்கியது. இதையடுத்து ஜெகதீசன் 403 பந்துகளில் 23 ஃபோர்ஸ், 5 சிக்ஸ் உட்பட 321 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடந்த போட்டியில் ஜெகதீசன் இரட்டை சதம் விளாசிய நிலையில், தற்போது முச்சதம் விளாசி மிரட்டியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக ஆடிய ஜெகதீசன், நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே கழற்றிவிடப்பட்டார். இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் ஜெகதீசனை எந்த வீரரும் வாங்குவதற்கு முன்வராத சூழலில், ரஞ்சி டிராபி தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.