சென்னை: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் அளிக்கப்படக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்று வந்த குல்தீப் யாதவ் தற்போது காயத்தில் சிக்கி இருக்கிறார். அதனால் அவரது இடத்துக்கு மாற்றாக சுழற் பந்துவீச்சாளராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் இந்திய ஒருநாள் அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் அணிக்கு தேவை. அந்த இடத்தை பிடிக்க இரண்டு டி20 சிறப்பு பந்துவீச்சாளர்கள் இடையே போட்டி எழுந்துள்ளது. அந்த இருவர் ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசினாலும் அவரைக் காட்டிலும் வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டு காலத்துக்கு பின் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்று ங்கதேச டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆடினார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வருண் சக்கரவர்த்தி இந்த ஆண்டு தான் ஆடிய 7 டி20 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 போட்டிகளில் 12 விக்கெட்களை வீழ்த்தி அசர வைத்தார். மிகவும் கட்டுக்கோப்பாகவும் பந்து வீசி இருந்தார். இதை அடுத்து அவரை இந்திய ஒருநாள் அணியிலும் சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ட்ராபி தொடர் விரைவில் நடைபெற உள்ளது. அதில் வருண் சக்கரவர்த்தி தமிழ்நாடு அணியில் இடம் பெற்று இருக்கிறார். அந்தத் தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.