பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர்களான சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பவுலிங் செய்ய போதுமான வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் வழங்காதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி 321 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 134 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.

இதன்பின் கேஎல் ராகுல் - ரியான் பராக் இருவரும் இணைந்து 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவருமே நிதானமாக ரன்கள் குவித்ததால், இந்தியா பி அணி பவுலர்கள் அவர்களின் விக்கெட்டை வீழ்த்த திணறினர். அப்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் கேஎல் ராகுல் 111 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த போது போல்டாகி வெளியேறினார்.
இதன்பின் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக பவுலிங் கிடைக்கும் என்று பார்க்கப்பட்ட போது, வெறும் 4 ஓவர்களோடு நிறுத்தப்பட்டது. இதன்பின் தனுஷ் கோட்டியான் நீண்ட நேரமாக ரன்கள் சேர்க்க போராடி இருந்தார். வேகப்பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்ட தனுஷ் கோட்டியானை வீழ்த்த மீண்டும் ஸ்பின்னரை நாடினார் ஈஸ்வரன். இம்முறை சாய் கிஷோர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
அவர் தனுஷ் கோட்டியானை 32 ரன்களிலும், கலீல் அஹ்மத்தை டக் அவுட் செய்தும் வெளியேற்றினார். இதன் மூலமாக இந்தியா ஏ அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்தியா பி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதில் முக்கியமான பார்க்கப்பட வேண்டியது என்னவென்றால் சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து மொத்தமாகவே 10.4 ஓவர்களை தான் வீசி இருக்கின்றனர். இத்தனைக்கும் இருவரும் இணைந்து 3 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியுள்ளனர். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரனின் ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் முகேஷ் குமார் மட்டும் 19 ஓவர்கள் வீசியுள்ளார்.
ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டிக்கு கூட 11 ஓவர்கள் வீச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தாலும், 40 ஓவர்களுக்கு பின் பந்து நிச்சயம் பழையதாக மாறியிருக்கும். அப்போது ஸ்பின்னர்களுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு அளித்திருக்கலாம். ஆனால் அப்போதும் கூட 2 தமிழக வீரர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்காக ஆடி வரும் குல்தீப் யாதவிற்கு 21 ஓவர்கள் வீச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணிக்காக போதிய அனுபவத்துடன் உள்ள வாஷிங்டன் சுந்தருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏற்கனவே பேட்டிங்கில் அவர் சொதப்பிய நிலையில், பவுலிங்கிலும் வாய்ப்பு அளிக்கப்படாதது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.