மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் சர்ச்சை
மகளிர் கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய புயல் வீசியது. தற்காலிக பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மிதாலி ராஜ் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் வெடித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. அத்துடன் ரமேஷ் பவாரின் பதவிக் காலம் முடிந்ததால் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியது.
கேரி கிர்ஸ்டனுக்கு அதிக வாய்ப்பு
பயிற்சியாளர் பதவிக்கு சுமார் 28 விண்ணப்பங்கள் வந்தன. அதில் மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு வாய்ப்பில்லை என்ற கருதப்பட்டது. இந்திய ஆடவர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், அவர் ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருக்கிறார் என்ற குழப்பம் இருந்தது.
இறுதியாக மூன்று பெயர்கள்
தேர்வுக் கமிட்டியில் கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கஸ்வாமி இடம் பெற்று இருந்தனர். இவர்கள் கேரி கிர்ஸ்டன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் டபுள்யூ.வி.ராமன் பெயரை பிசிசிஐக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் ஒருவரை நியமிக்குமாறு பிசிசிஐக்கு கூறினர்.
தமிழகத்தின் டபுள்யூ.வி.ராமன் நியமனம்
கேரி கிர்ஸ்டனுக்கு வாய்ப்பு இருந்தும் அவர் ஐபிஎல் அணி பதவியை விட மாட்டார் என்பதால், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருக்கும் டபுள்யூ.வி.ராமனை நியமித்துள்ளது பிசிசிஐ. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
டபுள்யூ.வி.ராமன் யார்?
டபுள்யூ.வி.ராமன் சென்னையை சேர்ந்தவர். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர். இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். தென்னாபிரிக்காவில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.
அனுபவம் கொண்டவர்
பயிற்சியாளர் பதவியில் நிறைய அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு மற்றும் பெங்கால் ரஞ்சி அணிகளுக்கு நீண்ட காலமும், இந்தியா அண்டர் 19 அணிக்கு குறுகிய காலமும் பயிற்சி அளித்துள்ளார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இந்திய மனநிலை புரிந்த டபுள்யூ.வி.ராமன் மகளிர் அணி குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிகளை குவிக்க வழி செய்வார் என நம்பலாம்.