"அபிஷேக்கை மக்கள் மறந்துவிடுவார்கள் ஏன்னா.. ".. 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ராஜஸ்தான் வெற்றிக்கு உதவிய சூர்யவன்ஷி, தற்போது 4 போட்டிகளில் 200 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இவரது இந்த அசாத்திய வளர்ச்சியைப் பார்த்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் அகமது ஒரு அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கும் போது, மக்கள் அபிஷேக் சர்மாவின் பெயரையே மறந்துவிடுவார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாகக் களமிறங்கினாலும், அனைவரது பார்வையும் வைபவ் சூர்யவன்ஷி மீது தான் இருக்கும். டிவியில் பார்க்கும் போது அபிஷேக் சர்மா பேட்டிங் செய்வதே யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு வைபவ் சூர்யவன்ஷி ஆதிக்கம் செலுத்துவார்" எனப் புகழ்ந்துள்ளார்.
தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அபிஷேக் சர்மா மற்றும் அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். 2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியைத் திணறடித்த அபிஷேக் சர்மாவை விட, சூர்யவன்ஷி மிகச் சிறந்த வீரராக உருவெடுப்பார் என பாகிஸ்தானிலேயே ஒப்பிட்டுப் பேசுவது பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
அபிஷேக் சர்மா 2018ல் ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய போது ஆரம்பத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தார். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய அவர், 2022ல் தொடக்க வீரராகப் பதவி உயர்வு பெற்ற பிறகுதான் உலகத்தரம் வாய்ந்த வீரராக மாறினார். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து வருகிறார்.
ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் முத்திரை பதித்த இவர், இப்போது ஐபிஎல் அரங்கிலும் புதிய சரித்திரம் படைத்து வருகிறார். பும்ரா, ஜோஷ் ஹேசல்வுட் என உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களையே சரமாரியாக கையாண்டு ரன் குவித்தார் வைபவ் சூர்யவன்ஷி. இவர் இந்திய அணியில் நுழையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications